முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி… உடனடியாக உதவிய அதிகாரிகள்!

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டிக்கு முதலமைச்சரின் உதவியாளர்கள் உடனடியாக உதவி செய்தனர்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டிக்கு முதலமைச்சரின் உதவியாளர்கள் உடனடியாக உதவி செய்தனர். 

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.  மார்ச் 20 முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதையடுத்து,  பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக வேட்பாளர்களையும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அந்த வகையில் நேற்று கன்னியாகுமரி,  திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.  இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது தூத்துக்குடி காமராஜர் மாக்ர்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும்,  பொதுமக்களிடமும் வாக்கு சேகரித்தார்.

இந்த நிலையில்,  மார்க்கெட்டின் வாயிலில் மூதாட்டி ஒருவர் அழுது கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மூதாட்டியிடம் என்னவென்று கேட்டதற்கு காய்கறி வாங்க கொண்டு வந்த பண பையை யாரோ திருடிவிட்டதாகவும்,  அதில் 1500 ரூபாய் பணம் இருந்ததாகவும் மேரி என்ற மூதாட்டி கூறினார்.  இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனே நடவடிக்கை எடுக்கும்படி அவரின் உதவியாளர்களிடம் கூறினார்.  இதனையடுத்து அவர்கள் அந்த மூதாட்டிக்கு 2000 ரூபாய் பணத்தை கொடுத்து காய்கறி வாங்கி கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.