“அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்கள்”- டிடிவி தினகரன் வைத்த சஸ்பென்ஸ்

அதிமுகவில் இன்னும் தங்களது ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் தேவைப்படும்போது அவர்கள் வெளிப்படுவார்கள் எனவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

அதிமுகவில் இன்னும் தங்களது ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும் தேவைப்படும்போது அவர்கள் வெளிப்படுவார்கள் எனவும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இன்று நடைபெற்ற கூட்டத்தில் முழுக்க முழுக்க அமமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து மட்டுமே ஆலோசனை நடைப்பெற்றதாகக் கூறினார்.

”உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்கனும் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்கிற பழமொழிக்கு ஏற்ப அதிமுகவில் தற்போது  பிரச்னை நடைபெறுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். நயவஞ்சகர்கள் கையில்தான் அதிமுக தற்போது இருப்பதாகக் கூறிய அவர்,  பதவியில் இருக்கும் வரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல்  இருந்த அவர்கள்,  தற்போது ஆட்சி மாறிய பிறகு பிரச்னை செய்வதாகக் கூறினார். அதிமுகவில் உள்ள சிங்கங்கள் அனைவரும் அமமுகவிற்கு வந்துலிட்டதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். பணம், பொருள் கொடுத்து தாம் அமமுகவின்  பொதுச்செயலாளர் பதவிக்கு வரவில்லை என்று கூறிய டிடிவி தினகரன்,  அதிமுகவில் தனக்கு பெரும்பாலானவர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி, எதற்காக பணம் கொடுத்து நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும் என  கேள்வி எழுப்பினார். ஜனநாயக முறையில்தான் தான் போராடிக்கொண்டு இருப்பதாகக் கூறிய அவர் அடுத்தவர்கள் கட்சியில் தான் தலையிட முடியாது என்றார்.

தங்களுடைய  சிலிப்பர் செல்கள்  இன்னும் அதிமுகவில் இருப்பதாகக் கூறிய டிடிவி தினகரன்,  தேவைப்படும்போது அவர்கள் வெளியில் வருவார்கள் என சஸ்பென்ஸ் வைத்தார். தனக்கு ஒருத்தர் எதிரியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் தகுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் காட்டமாக கூறினார்.  திமுக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருக்க மாட்டேன். அதற்காக  எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பேன் என தான் அதிமுக பொதுக்குழுவில் முன்பு பேசி இருந்ததை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், ஆனால் அது கேட்க வேண்டியவர்களுக்கு கேட்கவில்லை என்றார். வருகிற 2024 தேர்தலில் அமமுக யாருடைய பக்கம் என்பதில் நிலையான உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.