டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு அதிமுகவில் இணைவது தொடர்பாக மன்னிப்புக் கடிதம் வழங்கினால் அந்தக் கடிதத்தை கட்சித் தலைமை பரிசீலனை செய்யும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுக-வில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்துக்குரியது எனக் கூறினார். அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் எனவும் அவர் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் என்ற தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி அமமுக என்றும் அப்படிப்பட்ட ஓரு கட்சியுடன் அதிமுக இணைவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் கேபி முனுசாமி கூறினார்.







