சென்னை கடற்கரை சாலையில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள், மேலும் ஒரு வாரத்திற்கு அதே இடத்திலேயே காட்சிப்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை குடியரசு தின விழாவில், தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைதொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 26ஆம் தேதி அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு கடந்த 20ஆம் தேதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 21ஆம் தேதி அன்று இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வாரத்திற்கு அவ்விடத்தில் அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.