”பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை” – மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்!

பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்தது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை…

பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்தது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது கண்டனத்திற்குறியது. இது பாஜகவின் அரசியல் துன்புறுத்தல் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சியில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.