தமிழ்நாட்டில் மதவெறியைப் புகுத்தி வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியைத் தடுக்க, கிராமந்தோறும் சமூக நீதி படையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா ஹிஜாப் விவகாரம் தொடர்பாக டெல்லியில் வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“ கர்நாடக கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்றிய மாணவர்கள் அப்பாவியாக இருந்தாலும், சங்க பரிவார அமைப்புகள் அவர்களை இயக்குகிறார்கள் எனச் சாடினார். நாடாளுமன்றத்திலும் மத அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும், நாட்டை மதத்தால் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமியர்கள், கிறித்தவர்களுக்கு எதிராக வெறுப்பைத் திட்டமிட்டுத் திணிப்பது மிகவும் ஆபத்தானது எனக்கூறிய அவர், இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், கர்நாடகாவை மையமாக வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஊடுருவி கிராமந்தோறும் மதவெறியைப் பரப்பி வருகிறார்கள் எனக்குற்றம்சாட்டிய திருமாவளவன் , தமிழ்நாட்டில் மதவெறியைப் புகுத்தி வேட்டைக்காடாக மாற்றும் முயற்சியைத் தடுக்க, கிராமந்தோறும் சமூக நீதி படையை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அறிவியல் பல்கலைக்கழகம் நிறுவுவோம் என்று கூறாமல் உத்தரப்பிரதேச தேர்தல் அறிக்கையில் ராமாயணத்துக்கு பல்கலைக்கழகம் நிறுவப்படும் எனத் தெரிவிப்பதிலிருந்தே இவர்கள் நாட்டை 5000 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. இது ஆபத்தானது” என திருமாவளவன் எச்சரித்தார்.








