29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

பிராந்திய ரீதியாக நம்மை பிரிக்கும் முயற்சி நடக்கிறது: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சக்திகள் நம்மை பிராந்திய ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு பகுதிகள் குறுநில மன்னர்களின் கீழ் இருந்தது. அவ்வாறு இருந்த 550க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை ஒருங்கிணைந்த பகுதியாக இணைத்த பெருமை சர்தார் வல்லபாய் படேலை சேரும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். எனவே இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

அவரது 147வது பிறந்த தினமான இன்று, தேசியஒற்றுமை தினமாககொண்டாடப்படுகிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், படேலின் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கெவாடியாவில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கெவாடியாவில் நடைபெற்ற வரும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, குஜராத் பால விபத்து நிகழ்வால் எனது இதயம் வலியுடன் காணப்படுகிறது. ஒரு புறம் வலி நிறைந்த இதயமாக இருந்தாலும் மறுபுறம் கடமைக்கான பாதை இருக்கிறது. நான் இங்கிருந்தாலும் எனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது.

கடந்த காலங்களைப் போலவே, இந்தியாவின் முன்னேற்றத்தால் குழப்பமடைந்த சக்திகள் இன்றும் உள்ளன. அவர்கள் நம்மை உடைக்கவும், பிரிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஜாதியின் பெயரால் நம்மை எதிர்த்துப் போராட கதைகள் உருவாக்கப்படுகின்றன. பிராந்தியங்களின் பெயரால் எங்களைப் பிரிக்க முயற்சி நடக்கிறது என்றார்.

ஒரு இந்திய மொழியை இன்னொரு இந்திய மொழிக்கு எதிரியாக்கும் பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளாமல், ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்லும் வகையில் வரலாறு முன்வைக்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முன்னாள் அரச குடும்பங்கள், நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு புதிய அமைப்புக்காக தங்கள் உரிமைகளை அர்ப்பணித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக இந்த பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. முன்னாள் அரச குடும்பங்களின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஏக்தா நகரில் கட்டப்படும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading