கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட மேலும் பல தளர்வுகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து படிப்படியாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த வகையில், மேலும் 2 வாரங்களுக்கு (செப்டம்பர் 6) வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அத்துடன் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. அதேபோல், கடற்கரையில் இதுவரை நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுமுதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களும் இன்றுமுதல் செயல்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கான பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.








