சூடானில் உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மோதலில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
சூடானின் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சண்டை நீடித்து வரும் நிலையில், கார்ட்டூமில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 60 கைக்குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போதிய உணவு கிடைக்காமல், காய்ச்சலால் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. கடந்த வார இறுதியில், 26 பேர் இரண்டு நாட்களில் இறந்ததாக அசோசியேட்டட் பிரஸ் (AP) தெரிவித்துள்ளது. ஆதரவற்றோர் இல்ல அதிகாரிகள் மற்றும் தொண்டு பணியாளர்களின் அறிக்கைப் படி, இறந்தவர்களில் மூன்று மாத கைகுழந்தைகளும் அடங்குவர்.







