கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு பணிக்காக சென்னையில் மட்டும் 10,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர காவல்துறை, “தமிழக அரசின் ஒமைக்ரான் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இன்று (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கு (இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை) மற்றும் வருகின்ற 09.01.2022 ஞாயிறன்று முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச்சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளது. மேலும்,
“இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் உரிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் வணிகநிறுவனங்கள் கடைகளை மூடியுள்ளனரா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், “பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி இரவு ஊரடங்கின் போதும், முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றக் கூடாது.
அத்தியாவசியப் பணிகளான ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள். பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள். மருந்தகங்கள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் ஏ.டி.எம் மையங்கள். சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.
அவசர மருத்துவ சிகிச்சை, மற்றும் தவிர்க்க முடியாத தேவைகளை தவிர வேறெந்த நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள். வருவாய்துறையினர், தூய்மைபணியாளர்கள் அடையாள அட்டைகள் அணிந்திருக்கவேண்டும். முன்களப்பணியாளர்கள் காவல் துறையினரின் சோதனையின் போது தங்களது அடையாள அட்டைகளை காண்பித்து செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப சேவைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு செல்லும் போது தங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கவேண்டும்.” என்றும் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் மருத்துவ அவசரசேவைகள், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை என்றும்
7.09.01.2022 ஞாயிறன்று மற்றும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை, விமானம், இரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், இரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல பொதுமக்கள் சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். அவ்வாறு பயணிக்கும் போது பயணச்சீட்டு கட்டாபமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், “கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு அனுமதிக்கப்படும்
முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுகிழமை மற்றும் மற்ற நாட்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசு தேர்வாணையம் (UPSC & TNPSC) நடத்தும் தேர்வுகள். மற்ற போட்டித்தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதி சீட்டு (Hall Ticket) அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் (call Letter) ஆகியவற்றை போலீசார் சோதனையின் போது காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்
மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்திடும் பணியினை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள். துணை ஆணையாளர்கள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் முன்களப்பணியாளர்கள். காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.