31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்!

பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்திய பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்எஸ் சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை (28.09.2023) ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வேளாண் பெருமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1925-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் எம்.எஸ். சுவாமிநாதன். பள்ளிப்படிப்பை  முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் கல்லூரியில் (தற்போது வேளாண் பல்கலைக்கழகம்) இளநிலை வேளாண்மை பட்டத்தையும் பெற்றார். பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ் பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த இவர், தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகளை பெற்றவர். பெருமைமிகு மகசேசே விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருதையும் அவர் பெற்றுள்ளார்.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2019-ம் ஆண்டு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் தமிழ் ரத்னா விருது எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கி சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதனின் அறக்கட்டளையில் அவரது உடல், நேற்று (செப். 29) காலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அவரது மகள் சௌமியா சுவாமிநாதனிடம் பேசியதுடன் ஆறுதலும் தெரிவித்தார். முதலமைச்சரை தொடர்ந்து இன்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் எம்.எஸ். சுவாமிநாதனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மதியம் 12 மணிக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. தரமணியில் இருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு 11.30 மணியளவில் எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. பெசண்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு  மொத்தம் உள்ள 16 காவலர்களில் 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading