சட்டப்பேரவையில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி, சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பேரவை தொடங்கியதுமே முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களின் மறைவுக்கு பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றினார். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு மதிமுக, விசிக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, மமக, கொமதேக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையும் படியுங்கள் : செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை
முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் முழுமையாக இல்லை எனக் கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கிடைக்க அனைவரும் சேர்ந்து செயல்படும் பொருட்டு அதிமுகவும் துணை நிற்கும்’ என்று தெரிவித்தார்.
பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.