சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க, மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியதால் விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திய அரசு, இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியது.
அதோடு மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதலுக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. பேனா நினைவுச் சின்னம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை, பொதுமக்கள் கருத்து கேட்பு முடிவு உள்ளிட்ட விவரங்கள் அந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு 15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.
இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த அதே 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி வழங்கி, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் மூலம் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால், விரைவில் பணிகளை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.







