தருமபுரி அருகே செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சக்கிலி நத்தம் கிராமத்தை சேர்ந்த மாதுவின் மகன் வெங்கடேசன். (வயது 45) கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் கோயமுத்தூர், ஈரோடு பகுதிகளில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது தம்பி குமார் (வயது 40) விவசாயி. குமார் இரண்டு கன்றுகுட்டிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இரண்டு கன்றுகளும் சமீபத்தில் இறந்து விட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கன்றுக்குட்டிகள் இறந்ததற்கு அண்ணனும் அண்ணியும் செய்வினை செய்வது தான் என்று கூறி அவர்களுடன் குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு இருந்த அண்ணன் வெங்கடேசன் மற்றும் அண்ணி பெருமா ஆகியோரிடம் சென்று தனது மாட்டை செய்வினை வைத்து கொன்று விட்டீர்கள் என்று கூறி குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அண்ணன் வெங்கடேசனின் தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் மண்டை பிளந்து வீட்டு வாயிலில் வெங்கடேஷன் சரிந்து விழுந்தார். தடுக்க வந்த அண்ணி பெருமாவையும் குமார் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். பின்னர் அங்கிருந்து குமார் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் படுகாயமடைந்த பெருமாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்து விட்டு தலைமறைவான தம்பி குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அண்ணன் செய்வினை செய்து வைத்துள்ளார் என்ற மூட நம்பிக்கையில் பாசமாக பழகிய தம்பியே அண்ணை கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள், அறிவியல் வளர்ந்து வரும் நாகரீகத்தில் கூட செய்வினை போன்றவற்றை மக்கள் தீவிரமாக நம்புகிறார்களே என்று வேதனை தெரிவித்தனர்.