தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம் ரூ. 4,800 கோடி அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக 2018ம் ஆண்டு திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்படும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கியிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பிலும், லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதோடு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரித்துக் கொள்ளுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு முறையிடப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்பான தேதி எதுவும் தெரிவிக்க முடியாது எனவும், அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் எனவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடிக்கு எதிரான நெடுஞ்சாலைகள் டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அதில், அடுத்தவாரம் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். முன்னதாக, இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் அரசு வழக்கறிஞராக பொறுப்பெற்றுள்ளார். எனவே, புதிதாக வழக்கறிஞர்கள் வழக்கை கையாளுகின்றனர். அது தொடர்பான வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை இரண்டு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கக் கூடாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா