பயிர் கடன்களை வழங்குவதற்கு, விவசாயிகளை வரையறுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும், பயிர் கடனை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தன்மை கருதியே, முன்னர் உத்தரவாக பிறப்பித்ததை தீர்ப்பாக எழுதவுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டின் முந்தைய அரசு, தேர்தல் வாக்குறுதியாக கூறியதே, அனைத்து விவசாயிகளுக்குமான கடன் தள்ளுபடி என்றும்,
இது முறையாக ஆய்வு செய்யப்படாமல், தரவுகளை பார்க்காமல் கொடுத்த வாக்குறுதிதான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை சுட்டிக்காட்டியே, சென்னை உயர்நீதிமன்றமும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், அனைத்து விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியதாகவும், ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை, அரசியல் சாசன அங்கீகாரமாக கணக்கில் எடுக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த விவசாயிக்கு வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முடிவெடுக்கவும், விவசாயிகளை வரையறை செய்வது உள்ளிட்ட அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு எனவும், அதனடிப்படையில் 5 ஏக்கர் வரையிலான விவசாய நிலம் கொண்டவர்களை சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து, கடன் தள்ளுபடி செய்ததுள்ள, அரசின் அந்த முடிவு சரியானது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனடிப்படையில், அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.