29.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியாச்சு – பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு என்ன செய்யும்..?

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ள நிலையில், அடுத்த 14 நாட்கள் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் என்ன செய்ய போகின்றன என்பதை விரிவாக பார்ப்போம்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் பூமியை நீல்வட்டப்பாதையில் சுற்றிய சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு பூமியை சுற்றிவந்த சந்திரயான் 3-ஆனது ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவி ஈா்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை அடுத்து மைல்கல் நிகழ்வாக ஆகஸ்ட் -5 ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான் 3 நுழைந்தது. பின்னர் நிலவை சுற்றிவந்த சந்திரயான் 3-ன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 17-ஆம் தேதி உந்துகலனில் இருந்து விக்ரம் லேண்டா் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டது.

பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் மிக நெருக்கமான சுற்றுப் பாதையான 25 கி.மீ. x 134 கி.மீ. தொலைவில் விண்கலம் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 21-ஆம் தேதி சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் மற்றும் சந்திரயான்-3 ‘விக்ரம்’ லேண்டா் இடையே தகவல் தொடா்பு வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை 5:44 க்கு  நிலவிற்கும் விக்ரம் லேண்டருக்கும் இடையே உள்ள இடைவெளியை சிறிது சிறிதாக குறைக்கும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.
அதே நேரத்தில் விக்ரம் லேண்டரின் கால்கள் நிலவை நோக்கி சரியாக திருப்பப்பட்டது. இதனை அடுத்து நிலவை நோக்கி மெல்ல விக்ரம் லேண்டர் நெருங்கிய நிலையில், இறுதியாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்தது.  அப்போது “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன், நீங்களும் தான்”  என்று சந்திராயன் -3-ல் இருந்து இஸ்ரோவிற்கு செய்தி வந்தது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு பக்கவாட்டில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்யும் விக்ரம் லேண்டர் புதிய புகைப்படங்களை அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரில் பொறுத்தப்பட்டுள்ள Horizontal Velocity Camera எடு்த்த 4 படங்களை இஸ்ரோவிற்கு அனுப்பியதாக இஸ்ரோ தெரிவித்தது.

நேற்று இரவு மேலும் சில புகைப்படங்களை விக்ரம் லேண்டர் அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் பொறுத்தப்பட்டுள்ள Landing Imager camera புதிய படத்தை அனுப்பியுள்ளது. அந்த படத்தில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளமும், லேண்டரில் உள்ள கால்களின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளன. தற்போது சந்திரயான் 3 நிலவின் சம தளத்தில் நிலையான இடத்தை தேர்வு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடுத்த 14 நாட்கள் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் என்ன செய்யும்..?

நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து சாய்வு பலகை மூலமாக வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுப் பணியை தொடங்கியது. ஆய்வு பணிக்கு தேவையான மின்சாரத்தை அளிப்பதற்காக சூரிய சக்தி தகடுகள் விரிந்து, ஆன்டெனா, கேமராக்கள் ஆகியவை செயல்பட தொடங்கின.

லேண்டரில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு ஊர்ந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பிரக்யான் ரோவர், உடனுக்குடன் புகைப்படங்களையும் எடுத்து பூமிக்கு அனுப்பும். இருள் சூழ்ந்த தென்துருவத்தில் தரையிறங்கியுள்ள சந்திரயான்-3 அடுத்தகட்ட சாதனையை படைக்க, நிலவு நேரப்படி வெறும் 14 நாட்களே எஞ்சியுள்ளன.

நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டுதான், பகல் தொடங்கும் முதல் நாளில் லேண்டரை நிலவில் தரையிறக்கியுள்ளது இஸ்ரோ.
அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை வாங்கிக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும்.

ரோவர் கருவியும் இடைவிடாமல் தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் முடித்துவிட இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. லேண்டரில் மொத்தம் 6 ஆய்வு கருவிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ராம்பா கருவி நிலவில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளது.

நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பகல் நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரங்களில் அதிக குளிரும் காணப்படும். அதன் மூலம் நிலவின் வளத்தை ராம்பா கருவி கணிக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்ததாக சேஸ்ட் கருவி நிலவில் உள்ள பாறை மற்றும் கற்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யும். அதன் மூலம் அதிக வெப்பத்தால் மண்ணில் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்.

ஐஎல்எஸ்ஏ (ILSA) கருவி, நிலவின் மேற்பரப்பில் நிலவுகின்ற அதிர்வுகளை ஆய்வு செய்து, பூமியை போலவே நிலவிலும் அதிர்வுகள் உள்ளதா என கண்டறியும். இத்தகைய ஆய்வுகள் நிலவில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களை உறுதிப்படுத்தும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடைசியாக எல்ஆர்ஏ (LRA) கருவி, நிலவின் சுழற்சியை கண்டறியும்.

பூமியை சுற்றி வரும்போது நிலவின் இயக்கம் மற்றும் அதிர்வுகள் குறித்தும் எல்ஆர்ஏ (LRA) கருவி ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், பிரக்யான் ரோவரில் உள்ள 2 கருவிகளில் எல்ஐபிஎஸ் கருவி, நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம மற்றும் வேதியில் கலவைகளை ஆய்வு செய்யும் என கூறியுள்ளது. ஏபி.எக்ஸ்.எஸ் கருவி, நிலவில் 10 சென்டி மீட்டர் துளையிட்டு அங்குள்ள பாறை மற்றும் மண்ணில் உள்ள மெக்னிசீயம், டைட்டானியம், காப்பர் உள்ளிட்ட கனிமங்களின் இருப்பு குறித்து கண்டறியவுள்ளது.

இந்த ஆய்வுகள் நிலவில் மனிதன் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய முக்கியமானவை என கருதப்படும் நிலையில், சந்திரயான்-3 மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மூலம் விண்வெளி பயணத்திற்கு தேவையான பொருட்களை பூமியில் இருந்தே கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்காது. மேலும், நிலவில் இருக்கும் கனிமங்கள், தனிமங்களை பூமியில் வாழும் மனிதர்களின் தேவைக்காக பயன்படுத்தி கொள்ள வாய்ப்பும் உள்ளது.

அடுத்ததாக, நிலவுக்கு சந்திரயான்-4 அனுப்பும் பணியை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூமிக்கு மீண்டும் திரும்பி வரும் வகையில் சந்திரயான்-4 அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. சந்திரயான்-4 விண்கலத்தில் அனுப்பப்படும் கருவி மூலம் நிலவின் தரைப்பகுதியில் உள்ள கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்படும் என்றும், அவைகள் ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading