6 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்குமாறு இன்று நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்களை கடந்த சனிக்கிழமை (27) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் குறிப்பிட்ட 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட கடல்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடல்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை (29) காலை குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, மீனவர்களை வரும் 12ஆம் தேதி வரை (12-09-2022) 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.








