சென்னை மாநகராட்சி சார்பில் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் சிறிய படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொசு ஒழிப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கூவம், அடையாறு மற்றும்
பக்கிங்காம் கால்வாய்களில் சிறிய படகுகள் மூலம் கொசு மருந்துகள் தெளிக்கும்
பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும்
ராயபுரம் உள்ளிட்ட ஐந்து மாநகராட்சி மண்டலங்களில் இந்த பணியானது நடைபெற
இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டலத்திற்கு இரண்டு படகுகள் என்ற
வீதத்தில் மொத்தம் 10 படகுகள் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்காக மாநகராட்சி சார்பில் 1,262 நிரந்தர பணியாளர்கள்
மற்றும் 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் இந்த
கொசு ஒழிப்பு பணியானது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, நீர் வழித்தடங்களில் படகுகள் மூலம் கொசு மருந்துகள் தெளிப்பதால்
நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாய தாமரைகள் மற்றும் செடிகளில் உற்பத்தியாகும்
கொசுக்களை ஒழிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பருவ மழைக் காலங்களில் கொசுக்களால் உற்பத்தியாகும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த கொசு ஒழிப்பு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த கொசு ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என
சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-ம.பவித்ரா