திண்டுக்கல் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள். 71 வயதான அவர் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 47 வயதில் ரத்தினவேல் என்ற மகன் இருக்கிறார். இவர் அதே ஊரில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். தாயுக்கும் மகனுக்கும் இடையே பல வருடங்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் அடிக்கடி தனது தாயுடன் ரத்தினவேல் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது தாய் முத்தமாளை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த முத்தமாளை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். மதுபோதையில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







