இலங்கை அதிபருக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தவர் விடுதலை

சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.   இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான…

சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை கொழும்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

 

இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார, கோட்டா கோ ஹோம் என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கினார். அதில் சமூக அக்கறை கொண்ட பதிவுகளை பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குழப்பதை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை அவர் வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரை முகத்துவாரம் போலீசார் கைது செய்தனர். தண்டனை சட்டம் 120 பிரிவின் கீழ் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

 

இதையடுத்து, தன்னை கைது செய்து தடுத்து வைத்ததற்கு எதிராக அவர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இழப்பீடாக 100 மில்லியன் ரூபாய் தனக்கு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். ‘கோட்டா கோ ஹோம்’ என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கியதற்காக தன்னை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்த அவர், தன் கைது குறித்து பொதுமக்களிடம் முதலில் தெரிவிக்கவில்லை என்றும் அதன்பின்னரே தெரியபடுத்தியதாகவும் இது தனது அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுருத்த பண்டார சார்பில் ஆஜரான வழக்குறிஞர், அவர் மீது குற்றச்சாட்டை தொடர முடியாது என தெரிவித்தனர். எனவே, அனுருத்த பண்டாராவை விடுதலை செய்யுமாறு வாதாடினார். இதனை கேட்ட நீதிபதி வழக்குறிஞர் சமர்பித்த ஆவணங்களை சரிபார்த்த பின் அனுருத்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.