கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புகைமூட்டம் – 4 பேர் உயிரிழப்பு!

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு ஏற்பட்ட மின்கசிவு விபத்தால், புகைமூட்டம் ஏற்பட்டு குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 8 மணியளவில், அவசர சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவால் புகைமூட்டம் எழுந்துள்ளது. புகை அதிகமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

அப்போது வெண்டிலேட்டரில் இருந்து மாற்றப்படும்போது வயநாட்டின் கல்பெட்டா மேப்பாடியை பூர்வீகமாகக் கொண்ட  நசிரா (44) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் அதிக புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தரை தளத்தில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவுக்கு அருகில் இருந்த யுபிஎஸ் அறையில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், நிலைமை விரைவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், ஆரம்பத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.