மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது அகில இந்திய மாநாடு கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர், மற்ற பொறுப்புகளுக்கான தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், இறுதி நாளான நேற்று அக்கட்சியில் பொதுச் செயலாளர் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய பொதுச் செயலாளராக இருந்து வரும் சீதாராம் யெச்சூரி மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார். இதன் மூலம் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3-வது முறையாக சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
69 வயதாகும் சீதாராம் யெச்சூரி, கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், வாசுகி, சம்பத், சண்முகம் மற்றும் கருமலையான், ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.