அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு வழங்கப்படும் என சிக்கிம் மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு இந்தியா. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இருப்பினும் இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் வகையில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய ஊயர்வு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதாவது, அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் ஒரு முறை ஊதிய உயர்வும், மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வும் வழங்கப்படும் என சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சிக்கிம் மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதை கணக்கில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 7 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். நாட்டிலேயே குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. 2022-ம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1.1 ஆக உள்ளது. குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறையும் தந்தைக்கு 30 நாட்கள் விடுமுறையும் ஏற்கெனவே சிக்கிம் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது.