சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் 28ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். ஜாமின் தொடர்பாக விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்றும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதி கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று மனுத்தாகல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி அல்லி முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்டார்.
இந்நிலையில், ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் மீண்டும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தை அணுகினர்.
அப்போது ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுக்க உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி ரவி அறிவுறுத்தினர். உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தம்மால் ஜாமின் மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். இதனைத்தொடரந்து உயர் நீதிமன்றத்தை நாட செந்தில் பாலாஜி தரப்பு முடிவு செய்துள்ளது.