இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு தீவிர காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவருக்கு காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பினார்.
மேலும் வயது மூப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், 75-வது சுதந்திர தினவிழாவில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கி சிறப்பித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.நல்லகண்ணு, தனக்கு விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதிக்கே திருப்பி கொடுத்தார்.
இந்நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நிலை பாதிப்பு குறித்து பரிசோதித்து வருவதாக ராஜீவ்காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.







