கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 2023ம் ஆண்டு தீபாவளிக்கு திரை விருந்தாக வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்; திரு ஒளிப்பதிவு செய்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதோடு, திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பெரும் அரங்கங்களும் அமைக்கப்பட்டன. கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் திரைப்படம் குறித்து கூறியதாவது:
படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப்பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம் குறித்து கூறியதாவது:
“எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.
விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான அதிரடி நகைச்சுவை கலந்த வெற்றிப் படமான ‘ஜிகர்தண்டா’வைப் போலவே இந்தப் படமும் ஆக்ஷன் கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாகிறது. பல திருப்பங்கள் நிறைந்த ஜிகர்தண்டாவை போல் இப்படமும் இன்னும் விறுவிறுப்புடன் கூடிய ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழு உறுதி செய்துள்ளனர்.