எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்கிற சிறுகதை தொகுப்புக்காக 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பை என்கிற சி. எஸ்.லக்சுமி தமிழின் பெண் படைப்பாளிகளுள் ஒருவராவார்.…

‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்கிற சிறுகதை தொகுப்புக்காக 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பை என்கிற சி. எஸ்.லக்சுமி தமிழின் பெண் படைப்பாளிகளுள் ஒருவராவார். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கிய இவர், ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியாவார்.

பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் எழுதிய இவர் உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களை சர்வ சாதாரணமாக எழுதிச் சென்றவராவார்.

பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில்​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.

இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி (Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார்.

வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்கிற சிறுகதை தொகுப்புக்காக 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” என்ற சிறுகதை தொகுப்புக்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு 2021க்கான “பால சாகித்ய புரஸ்கார்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்பைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.