சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிடும் சமூக வலைத்தள கணக்குகளை நீக்கக்கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது 2021ம் ஆண்டில், இதுபோன்று 2851 டிவிட்டர் பதிவுகளையும், 2022ம் ஆண்டில் 2000 க்கும் மேற்பட்ட ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
அவ்வாறு பின்பற்றவில்லையெனில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்தது.
அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இது எதிராக உள்ளது என்றும் நீதிமன்றத்தில் ட்விட்டர் கூறியிருந்தது. இதையடுத்து, பதிவுகளை நீக்குவது தொடர்பாக உரிய காரணங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் தனது உத்தரவில் கூறும்போது:
“மத்திய அரசுக்கு எதிரான ட்விட்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கணக்குகளை முடக்க கோரும் அதிகாரம் அரசுக்கு உண்டு. உத்தரவுகளை பின்பற்றாமல் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதற்காக, அந்த நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்தில் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அதனை கட்டத் தவறினால் நாள் ஒன்றிற்கு 5000 ரூபாய் அபராதம் கூடுதலாக விதிக்கப்படும்.
இந்திய அரசியலமைப்பின் 19 மற்றும் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமையை வெளிநாட்டு நிறுவனமான ட்விட்டர் கோர முடியாது.” இவ்வாறு நீதிபதி கிருஷ்ணா உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.







