ஓசூரில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். படிப்பில் முத்திரை பதித்த சாதனை மாணவியைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
படிப்பில் சிறந்து விளங்க உடல் குறைபாடு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் தான் ரியாஸ்ரீ. ஒசூரை அடுத்த டிரெண்ட் சிட்டி பகுதியில் வசித்து வரும் தனியார் தொழிற்சாலை ஊழியர் அகிலன் – சுமிதா தம்பதியின் ஒரே மகளான ரியா ஸ்ரீ பிறவியிலேயே கண்பார்வையற்றவர். தொடக்க கல்வியை சென்னையில் பிரெய்லி மொழியில் பயிற்சி பெற்ற அவர், 9 மற்றும் 10 ம் வகுப்பை ஒசூரை அடுத்த நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். மற்ற மாணவர்கள் பயிலக்கூடிய பாடமுறை என்றாலும் ரியா ஸ்ரீக்காக அவரது பெற்றோர்கள் சென்னையிலிருந்து பிரெய்லி மொழி புத்தகங்களை வரவழைத்து ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவி ரியாஸ்ரீக்கு அவரது பெற்றோர்கள் அளித்த பயிற்சியின் பலனாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 470 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வரும் ரியா ஸ்ரீ, தன்னை போன்று மாற்றுத்திறனாளி மாணவிகள் படித்து முன்னேற ஓசூரில் சிறப்பு பள்ளிகளை அரசு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் பகுதியில் மட்டும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கான பள்ளி உள்ளதால் மற்ற பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் வீடுகளிலிருந்து வெகு தூரம் சென்று படிக்க முடியாத அவலநிலை காணப்படுகிறது. மேலும் பிரெய்லி பாடப்புத்தகங்களும் கிடைக்காததால் மாற்றுத்திறனாளி ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே கண்பார்வை குறைபாடு, செவித்திறன் இழப்பு, வாய்பேச இயலாமை போன்ற மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்வி பயில ஓசூரில் பள்ளிகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்பதே ரியா ஸ்ரீ பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவி ரியாஸ்ரீக்கு திமுக ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் அவரது வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். ரியா ஸ்ரீயின் பெற்றோர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கல்விதுறை அமைச்சரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
பார்வை மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும் சிரமங்களை கடந்து படிப்பில் தனி முத்திரை பதித்துள்ள மாணவி ரியா ஸ்ரீயின் எதிர்கால இலக்கு நிறைவேற நியூஸ் 7 தமிழும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது.
ஓசூரிலிருந்து செய்தியாளர் முரளி, நியூஸ் 7 தமிழ்