32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுத்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள்

ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பது உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. பின்னர் நிகழ்ச்சி தொடங்கியதும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

அப்போது மேடையில் இடைமறித்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்க கோரிக்கை வைத்தார். அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்கிறோம் என்றனர். பின்னர் பேசிய கே.பி.முனுசாமி ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் அடுத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேடையில் ஆவேசமாக கூறினார்.

 

இதைத் தொடர்ந்து பேசிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதனிடையே, பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை என்றும் உத்தரவிட்டு பொதுக்குழுவு கூட்டத்துக்கு தடைக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

 

இந்நிலையில், வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கூறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 2,665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு திறந்த வெளியில் தனித்தனி இருக்கை மற்றும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கொரோனா விதிகளின்படி ஒவ்வொரு உறுப்பினர்களும் இடையே 2 அடி இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட உள்ளனர். இதற்காக மண்டபத்துக்கு வெளியே பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே , பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 16 தீர்மானங்கள் குறித்து தகவல் பிரத்யேகமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1) கழக அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்

2) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்

3) கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொது செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்

4) கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்

5) கழக இடைக்கால பொது செயலாளரை நடைபெறவுள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல்

6) கழக பொது செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்வது

7) கழகத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்து முடிவு எடுத்தல்

8) எம்.ஜி.ஆர். வழியில், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும் , எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளும் தெரியபடுத்தல்

9) அதிமுக அரசின் மக்கள் நலதிட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசின் கண்டனம்

10) விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மக்கள் விரோத திமுக அரசுக்கு கண்டனம்

11) சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்

12) மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளை வலியிறுத்தல்

13) இலங்கை தமிழர் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்

14) அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தல்

15) நெசவாளர் துயர் துடைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல்

16) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு கழகத்தினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்

 

உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading