கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களின்படி, கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்ற வங்கிகளின் கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதைத் தடுக்க கூடாது. கிரெடிட் கார்டுகளை வழங்கும் போது பல கார்டு நெட்வொர்க்களை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கெனவே கிரெடிட் கார்டு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த புதுப்பித்தலின் போது இந்த முறையிலேயே கார்டு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய வழிமுறைகளின் நோக்கம் என்ன?
கிரெடிட் கார்டுகளை வழங்குவதிலும், பயன்படுத்துவதிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வு மற்றும் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்வதே ஆர்பிஐயின் நோக்கமாகும். ‘கார்டு நெட்வொர்க்குகள் மற்றும் கார்டு வழங்கும் வங்கிக் கிளை / கார்டு வழங்கும் ஏஜன்ட்டுகளுக்கு இடையேயான சில ஏற்பாடுகள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை கட்டுப்படுத்துகின்றன.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேஷன், டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல் லிமிடெட், மாஸ்டர் கார்டு ஏசியா, எம்/எஸ் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-ரூபே மற்றும் விசா வேர்ல்டுவைட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட கார்டு நெட்வொர்க்குகள் என ரிசர்வ் வங்கி உத்தரவு வரையறுக்கிறது.
புதிய வழிகாட்டுதல்களால் பாதிக்கப்படாதவர்கள் யார்?
10 லட்சத்திற்கும் குறைவான பரிவர்த்தனை உள்ள கார்டுகளைக் கொண்ட கிரெடிட் கார்டு வழங்குபவர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் பொருந்தாது.
இது எப்போது நடைமுறைக்கு வரும்?
கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் தேர்வு தொடர்பான வழிமுறைகள் 6 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.