மொரிடேனியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 49 பேர் உயிரிழப்பு!

மொரிடேனியா நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 49 பேர் உயிரிழந்தனர்.

ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 17 பேரை உயிருடன் மீட்டனர். இருப்பினும், இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,100 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.