“தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் 25ம்தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும்” -வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.23-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை…

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நவ.23-ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 21-ம் தேதி வாக்கில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.  இதன்காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய கூடும். குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் 25-ம் தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. 

நவ.25-ம் தேதி, கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.