32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

அவதூறு வழக்கிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் MP-ஆன ராகுல் காந்தி: 136 நாட்களில் நடந்தது என்ன?

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரின் எம்.பி தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்துள்ளது. இதனால், 136 நாட்களுக்குப் பின் மீண்டும் எம்பியானார் ராகுல்காந்தி…..இது தொடர்பான விவரங்களை தற்போது பார்க்கலாம்…  

தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தியில் பேச்சு:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2019-ல் நடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

குற்றவாளி என தீர்ப்பு – மார்ச் 23, 2023: 

ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்ததுடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

தகுதியிழப்பு – மார்ச் 24, 2023:

மேல்முறையீடு செய்வதற்கு 1 மாதம் அவகாசத்தை நீதிமன்றம் அளித்திருந்தும், அவசர அவசரமாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அறிவித்தது.

சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஏப்ரல் 20, 2023:

சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் வழங்கிய தீர்ப்பிற்கு இடைக்கால தடை கோரி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை ராகுல் காந்தி அணுகினார். ஆனால் அந்நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்தது. மேலும் எம்.பி.யாகவும், நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் தலைவராகவும் இருந்த நபர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஏப்ரல் 25, 2023: 

சூரத் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். குஜராத் உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு இந்த மனுவை விசாரித்த போது இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு வாய்ப்பிலை என்று கூறியதோடு கோடை விடுமுறைக்குப் பின்னர் இதன் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

ராகுல் காந்தி மீது அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகள்:

பாட்னாவில் வழக்கு: சூரத்தில் புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்ட நிலையில் ராகுல் மீது மேலும் பல அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மாநிலங்களவை எம்.பி. சுஷில் குமார் மோடி பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல் அவதூறு வழக்கைத் தொடந்தார்.

ஜார்க்கண்ட் நீதிமன்றத்தின் உத்தரவு: வழக்கறிஞர் பிரதீப் மோடி என்பவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார். இதில் ஜூலை 4 ஆம் தேதி நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

ஜூலை 7, 2023: தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

நீதிபதியின் கண்டனம்: தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹேமந்த் பிரச்சக், “இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே ராகுல் காந்திக்கு எதிராக மேலும் பல வழக்குகள் தாக்கலாகின. அதில் ஒன்று வீர் சாவர்க்கரின் பேரன் தாக்கல் செய்த வழக்கு. எனவே, தண்டனை என்பது நிச்சயமாக அநீதி அல்ல. தீர்ப்புக்கு இடைக்கால தடை வழங்க வேண்டும் என்பதும் விதிமுறை அல்ல. அது விதிவிலக்கு. ராகுல் காந்தி முகாந்தரமே இல்லாமல் இடைக்கால தடை கோருகிறார்” என்று தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஜூலை 15, 2023:

சூரத் செஷன்ஸ் நீதிமன்றம், குஜராத் நீதிமன்றம் ஆகியவற்றில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இறுதியாக, உச்சநீதிமன்றத்தில் ஜூலை 15-ஆம் தேதி ராகுல்காந்தி மேல் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை – ஜூலை 21:

உச்சநீதிமன்றம் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஜூலை மாதம் 21-ம் தேதி விசாரித்தது. ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்டு 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றவியல் நடைமுறை மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் செய்யாத குற்றத்திற்காக ஒருவரை மன்னிப்பு கேட்க நிர்பந்திப்பது நீதித்துறை செயல்முறையின் மோசமான துஷ்பிரயோகம். இந்த அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது!!! -

ஆகஸ்ட்  4 – உச்சநீதிமன்ற விசாரணை:

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளி கிழமை (ஆகஸ்ட்  4) விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

அதிகபட்ச தண்டனையின் காரணமாக ஒரு தனி நபரின் உரிமை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது, ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என்ற அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானாதா?. இரண்டு ஆண்டு சிறை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல் காந்தி என்ற தனிநபருக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையால் அவர் சார்ந்த தொகுதி பாதிக்கப்படுகிறதே என்று விமர்சித்து ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி. ஆக்காதது ஏன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மக்களவை சபாநாயகரும், மக்களவை செயலாளரும் வேண்டும் என்றே தாமதப்படுத்துவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்பப் பெறுவதாக மக்களவை செயலகம் இன்று அறிவித்தது. இதனால் மீண்டும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரானார் ராகுல் காந்தி. இதனால் நாளை தொடங்க உள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading