அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார்.
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செயல்பட்ட செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் தம்மையும் இணைத்து கொள்ளுமாறு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் 9 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா .ஜெயக்குமாரை இன்று ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதன் பேரில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
நீதிமன்றம் உத்தரவுப்படி இன்று ஆஜரானேன். எனது மனு ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிவிடக்கூடாது என ஜெயக்குமார் தெரிவித்தார்.







