இந்திய பொருளாதாரத்தை உலக அரங்கில் 5வது இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு அகமதாபாத் பகுதியில் மேம்பாலம் மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தை இன்று திறந்து வைத்தார். மேலும் குஜராத்தின் சனந்தில் ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைக்கு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியின் ஆட்சியில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சுகதார திட்டங்களின் மூலம் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாராத் யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 60 கோடி மக்கள் பயனடைந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், குஜராத்தின் சனந்தின் மாநில ஊழியர்களுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எக்ரே, ரேடியாலஜி, அதிநவீன ஆய்வுக்கூடங்கள், ஆபரேஷன் தியேட்டர், ஐசியு வசதி உள்ளிட்டவைகளுடன் அமையவிருப்பதாக தெரிவித்தார்.
சுகாதார சேவைகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பிரதமர் மோடி முழுமையான அணுகுமுறையுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். இந்தியா உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. காங்கிரஸ் அதை 12வது இடத்திற்கு தள்ளியது. அதை மீண்டும் 11வது இடத்திற்கு உயர்த்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்தார் என்றார்.







