குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு சிலர் அவருக்கு ஆதரவு அளிக்காமல் வாக்களிக்காமல் இருந்ததால் அவர்கள் பெயரளவிற்கு தான் சமூக நீதியை கூறி வருகின்றனர் என்றார். அவர்களின் இந்த செயல் பொதுமக்களிடையே அவர்களின் முகத்தை வெளியே காட்டியுள்ளது என கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியை ஊக்கப்படுத்துவதற்காக தான் பிரதமர் கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கையால் இன்னொரு மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்றுதான் தான் கூறினேன். ஆனால் இந்தியை பற்றி கூறுகிறேன் என்று ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எனது சமூக வலைதளத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என விளக்கமளித்தார்.

ஒரு சிலர் தமிழகத்தில் ஏன் இவர் வாலை ஆட்டுகிறார் என்று கேட்கிறார்கள். எனது உயிர் தமிழகத்தில் தான் போகும் நான் ஒரு தமிழச்சி. வேறு மாநிலத்திற்கு நான் பணி நிமித்தமாக தான் சென்று இருக்கிறேன். தற்போது கம்பர் ராமனை பற்றி பேசியதாலே கம்பராமாயணம் மட்டுமல்ல கம்பரும் மறைக்கப்படுகிறார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றி வருவது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.
தனக்கும் முதலமைச்சருக்கும் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் கிடையாது. அரசியல் அமைப்பில் ஆளுநருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது இது அரசியல் ஆக்க கூடாது என்பது தான் எனது கருத்து என்ற தமிழிசை சௌந்தரராஜன், பட்டமளிப்பு விழாவையே அரசியல் ஆக்குகிறார்கள் மாணவர்களுக்கு நல்லதை விதையுங்கள் என தெரிவித்தார்.
-இரா.நம்பிராஜன்







