நாளை தொடங்கவிருந்த செட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு!

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய,  அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET)…

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய,  அரசு சார்பில் நடத்தப்படும் நெட் (NET) அல்லது செட் (SET) எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் சுழற்சி அடிப்படையில் ‘செட்’ தேர்வை நடத்தி வருகின்றன.

அதன்படி,  2024ஆம் ஆண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு செட் எனப்படும் தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.  இதனையடுத்து இந்த ஆண்டுக்கான செட் தேர்வு அறிவிப்பை பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

முதலில் இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  இறுதியாக மே 15-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.  இத்தேர்வுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜூன் 7, 8ல் நடைபெறவிருந்த செட் தேர்வு தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  ஒத்திவைக்கப்பட்ட செட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.