ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பாடல்களின் வாயிலாக உலகறியச் செய்த மக்களிசைப் பாடகர் தலித் சுப்பையா உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் முனியாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் க. சுப்பையா விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயர் பெயர் பிச்சை. தமிழக தலித் கலை இலக்கியப் போராட்டங்களில் முன்னோடியாக திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாக, பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தவர் என்றே கூற வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறு வயது முதலே சாதிய பாகுபாடுகளை பார்த்தும், அனுபவித்தும் மார்க்சிய சிந்தனைகளில் தன்னைப் ஈடுபடுத்திக் கொண்டார். அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய சித்தாந்த செயற்பாட்டாளரான சுப்பையா, ஒரு கலை இலக்கியப் போராளியாக இருந்து சமகால தலித் இயக்கங்களினூடாக நிழலாக இயங்கி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக விடுதலை குரல் இசைப் போர் என்ற அமைப்பின் வழியே சமூகநீதி கருத்துக்களை ஓயாது விதைத்து வந்தார். சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான போரட்டங்களில், தலித் என்ற வார்த்தையே ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தலித் என்ற வார்த்தையை தனது பெயர் உடன் அதனை இணைத்துக் கொண்டவர். தலித் சுப்பையா என்ற தனது பெயரை மார்க்சிய கருத்துக்கள் ஆழமாக உள் வாங்கிய பிறகு சாதி அடையாளமே தலித் என்பதால் லெனின் சுப்பையா என மாற்றிக்கொண்டார்.
ஸ்பார்டகஸ் என்ற பதிப்பகத்தை நடத்தி வந்தார். பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட நூலில் தமிழகத்தில் கலாச்சார ரீதியான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் எனில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு தவிரத்து சாத்தியமில்லை என்பதை பகிரங்கமாக எழுதினார். சமூக நீதிக்கான பல பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.
உழைப்பின் களைப்பை மறக்க தன் தந்தை இரவு நேரங்களில் உறக்கத்திற்கான ஓசையாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செய்தியாகவும் உழைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான உரத்த சத்தத்துடன் என்னைத் தூங்க வைக்கப் பாடிய தாலாட்டுப் பாடல்கள் தான் என் புலன்களைப் பரவசப்படுத்தி என்னுள் பாடல் விதையை ஊன்றியது என சுப்பையா தனது ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
கலைத் தளத்தில் பாடல் எழுதுவது, பண்ணமைப்பது, பாடுவது, நாடகம் மற்றும் நாடக விமர்சனம் எழுதுவது போன்ற தளங்களில் இயங்கி வந்த சுப்பையா 1986 தொடங்கி இது வரையிலும் தலித் விடுதலைக்காக எழுதி, இசையமைத்து 82 பாடல்களை இயற்றியுள்ளார்.
சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எழுதும் பாடல் வரிகளையும், அனைவரையும் இழுக்கும் வெண்கல குரலை கொண்ட சுப்பையா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவர் மறைந்தாலும் அவரின் குரல் காலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை பிரபலித்துக் கொண்டே இருக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.