கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த அனுமதி

கோயில் திருவிழாக்களின் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரை நாடகங்கள் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்பு…

கோயில் திருவிழாக்களின் போது இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரை நாடகங்கள் நடத்த அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்த கருப்பு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த தனி நீதிபதி, ஆடல் பாடல் நாடகங்கள் நடத்த நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்தார். ஆனால் நிபந்தனைகளில் ஆடல் பாடல் நாடகங்கள் நிகழ்ச்சியில் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச நடனங்கள் இருக்கக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு11 மணி வரை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், மனுதாரர் தரப்பில் நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாடகங்கள் நடத்த நேரத்தை அதிகரித்து அனுமதி வழங்க வேண்டும் என இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கருப்பு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் திருவிழாக்களில் நாடகங்கள் நடத்த இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அனுமதி தந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.