“தமிழ்நாட்டிற்கு பேரிடர் காலத்தில் வராமல் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே வரும் தலைவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எதிர்கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு மக்களுக்கு உணவு பறிமாறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டிற்கு நிதி தரவில்லை என கூறும் தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் புலி போல்
பாய வேண்டும். ஆனால் பூனை போல் பதுங்குவதால் மக்களுக்கு சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் எல்லா கட்சி தலைவர்களும் பிரச்சாரத்திற்கு வருவார்கள். அதே போல் தான் பிரதமரும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதில் முக்கியமான செய்தி ஒன்றும் இல்லை.
பேரிடர் காலத்தில் மற்ற மாநிலத்திற்கு நேரில் போகும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், வரவில்லை. இதற்கு தக்க பதிலடியாக அந்த தலைவர்களுக்கு தேர்தலில் மக்கள் வாக்களிக்காமல் கண்டிப்பாக புறக்கணிப்பார்கள்” என தெரிவித்தார்.




