நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் ஏன்? பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த விவரங்களைக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக்…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த விவரங்களைக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலைக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும், 9 பிரச்னைகளை பட்டியலிட்ட அவர், அவை குறித்து விவாதிக்க நேரம் அனுமதிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினார்.

சோனியா காந்தி  கடிதத்தில்:

1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வளர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பு மற்றும் MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

2. விவசாயிகள் மற்றும் உழவர் அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அவர்களால் எழுப்பப்பட்ட இதர கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அளித்த உறுதிமொழியை செயல்படுத்துதல்.

3. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக வெளி வந்திருக்கும் உண்மைகளை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு (JPC) அமைக்க வேண்டும்.

4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் அம்மாநிலத்தில் அரசியலமைப்பு எந்திரம் மற்றும் சமூக நல்லிணக்கம் முற்றாக சிதைந்து போயிருத்தல் குறித்து விவாதிக்க வேண்டும்.

5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படும் வகுப்புவாத பதற்றம்

6.  இந்தியப் பகுதிகளில் சீனாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு. அதனால்  லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நமது எல்லைகளில் இந்திய இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

7. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசரத் தேவை.

8. மத்திய-மாநில உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.

9. சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.