பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் தொடங்கியது.
பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்க உள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வர உள்ள டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணு கோபால் டெல்லி அவசர சட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூரு எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் இன்று பங்கேற்கவில்லை என காலை முதலே தகவல்கள் வெளியாகியது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, 24 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை 6 மணிக்கு பெங்களூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தேநீர் விருந்து அளித்தார்.
இந்தையடுத்து, பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் தொடங்கியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனையில் 6 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது:
1. நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டத்தை வகுக்க துணை குழுவை உருவாக்குவது,
2. போராட்டம், பேரணி போன்ற கூட்டணி கட்சிகளின் செயல்திட்டத்தை செயல்படுத்த துணை குழுவை அமைப்பது,
3. மாநிலத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிப்பது,
4. மின்னனு வாக்கு இயந்திரம் குறித்து ஆலோசித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது,
5. கூட்டணிக்கு பெயரை பரிந்துரை செய்வது,
6. கூட்டணி கட்சிக்கு என்று பொது செயலகத்தை அமைப்பது.







