உதகையில் பழைய கழிவறை கட்டடம் கலைக்கூடமாக மாற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சேரிங் கிராஸ் பகுதியில் பல ஆண்டுகளாகப் பயன்பாடின்றி நகராட்சி கழிவறை கட்டடம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தற்போது அந்தக் கட்டடம், ‘தி கேலரி ஒன்டு’ என்ற பெயரில் கலைக் கண்காட்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது. நகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கட்டடத்தை கலைக் கண்காட்சிக் கூடமாக மாற்றும் பணியை உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் மேற்கொண்டனர்.

இங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்குடியினரின் உடை அலங்காரம், பாரம்பரிய பழக்க வழக்க முறைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள சிறிய நூலகத்தில் பழங்குடியினர் தொடர்பான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளதால், இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.







