டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநர் அதிகாரிகளை மாற்றவும் நியமிக்கவும் முடியும். இதற்கு ஆம் ஆத்மி மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்த சட்டம் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது,
“எதிர்க்கட்சிகள் மணிப்பூர் பற்றி கவலைப்படவில்லை. தங்களது கூட்டணியை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் முன்னுரிமை கொடுக்கிறது. அனைவரும் ஒரு மாநிலத்தில் உரிமைகளை பற்றி பேசுகிறார்கள். ஆனால் எந்த மாநிலம்? டெல்லி ஒரு மாநிலமே அல்ல. யூனியன் பிரதேசம். டெல்லிக்கான சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளது” என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.இதனிடையே சபாநாயகர் இருக்கையை நோக்கி மசோதா நகலை கிழித்து வீசிய ஆம்ஆத்மி எம்பி சுஷில் குமார் ரிங்குவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.






