திமுக ஆட்சி காலத்தில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக இடையே கருத்துமோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் நடந்ததென்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அறிக்கையில், “கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி மருத்துவப்படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆட்சியை இழந்த திமுக, அதன் பிறகு 2021-ல் தான் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியிலேயே இல்லாத நிலையில், எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்தது என்று முதலமைச்சர் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், “அதிமுக ஒருபோதும் நுழைவுத் தேர்வு அல்லது நீட் தேர்வை ஆதரித்தது இல்லை. நீட் தொடர்பாக தி.மு.க. என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? குறித்த தகவல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீட் விவகாரத்தில் திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது” என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.