ரிமல் புயல்: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு…

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  கடந்த 12 மணி நேரத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடலில் வலுப்பெற்றது.  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கேபுபரா (வங்காளதேசம்)க்கு சுமார் 800 கிமீ தொலைவிலும், தென்- தென்மேற்கு மற்றும் கேனிங்கிற்கு (மேற்கு வங்கம்) தெற்கே 810 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காலை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.  அதைத் தொடர்ந்து, அது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிரப் புயலாக வலுவடையும்.  தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, மே 26 ஆம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்களதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் தீவிரப்புயலாக கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து மீனவா்களுக்கும்,  கப்பல்களுக்கும் தெரிவிக்கும் வகையில் சென்னை, எண்ணூர்,  கடலூர்,  நாகப்பட்டினம்,  காட்டுப்பள்ளி,  புதுச்சேரி,  காரைக்கால், பாம்பன்,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் ஆகிய துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.