நடிகர் விஜய் நடித்த ”வாரிசு” படத்தின் படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க விலங்குகள் நலவாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் நடித்து வரும் ”வாரிசு” படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் ”வாரிசு” படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின்போது அனுமதியின்றி 5 யானைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் வனப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழும், விலங்குகள் நலச் சட்டத்தின் கீழும் யானைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விலங்குகள் நல வாரியம், சினிமாவில் யானைகளை பயன்படுத்துவதற்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உரிய முன் அனுமதி பெறாமல் வாரிசு படத்தில் யானைகளை பயன்படுத்தியது தொடர்பாக உரிய விளக்கத்தை 7 நாட்களுக்கு அளிக்க வேண்டும் என வாரிசு படத்தை தயாரித்து வரும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்சுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.