நிபா தொற்று முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமை இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர் ஒருவரின் 9 வயது மகன் உள்பட 4 பேர் நிபா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது நிபா தொற்றின் பரவல் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“நிபா தொற்றால் பாதிப்புக்கு இதுவரை 1,233 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பிரிவைச் சேர்ந்த 200 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த ஒன்பது வயது சிறுவன் உள்பட நான்கு பேரின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளது. மத்திய அரசின் ஐசிஎம்ஆர், என்ஐவி, சென்னையை சேர்ந்த தொற்றுநோயினால் நிறுவனத்தின் மருத்துவர்கள் குழு மற்றும் மாநில அரசு மருத்துவர்களின் தொடர் முயற்சியால் இத்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.கோழிக்கோடு மாவட்டத்தில் 2018, 2021-ம் ஆண்டுகளில் ஏற்கெனவே நிபா தொற்று பாதித்த பகுதிகளையும், வௌவால்கள் அதிகம் வாழும் வனப்பகுதிகளிலும் இக்குழு ஆய்வு மேற்கொண்டது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிக்கைகளின்படி கோழிக்கோடு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதுபோன்ற தொற்றுகள் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபா தொற்று பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்காக ‘ஒரே சுகாதாரம்’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் ‘ஒரே சுகாதாரம் ஆய்வு மையம்’ ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.